Home » » லைலதுல் கத்ரின் சிறப்புகள்.

லைலதுல் கத்ரின் சிறப்புகள்.

Written By STR Rahasiyam on Tuesday, August 7, 2012 | 10:37 AM


ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்…
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறைவரை இருக்கும்.
(அல்குர்ஆன் 97:1-5)
முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத் துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி (35)
லைலத்துல் கத்ரு எந்த நாள்?
லைலத்துல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந் தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற் காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்க ளில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெறமுயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),
நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)
நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவுதான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.
ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுக ளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இர வான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லி விட்டு, யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்த வராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),
நூல்: அஹ்மத் (20700)
மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
லைலதுல் கத்ர் 27வது இரவா?
லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுக ளில் ஒன்றாகத்தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு, ரமலான் 27வது இரவுதான் என்று முடிவு செய்து பெரிய விழா வாகக் கொண்டாகிறார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? என்பதை நாம் பார்ப்போம்.
லைலதுல் கத்ரு இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆவியா (ரலி),
நூல்: அபூதாவூத் (1178)
இது போன்ற சில செய்திகளை அடிப்படையாக வைத்து சிலர் லைலத்துல் கத்ர் இரவு 27வது இரவு தான் என்று கூறுகின்றனர்.
இந்த ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம் 27வது இரவு தான் என்று முடிவு செய்யலாம். ஆனால் இதற்கு மாற்றமாக நாம் முன்னர் குறிப்பிட்ட ஹதீஸில் லைலத்துல் கத்ர் இரவு என்பது நபி (ஸல்) அவர்களுக்கே மறக்கடிக்கப் பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு, கடைசிப் பத்தின் ஒற்றை நாட்களில் அதை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளை யிட்டுள்ளார்கள். மேலும் 27 என்று குறிப்பிட்டுள்ளதுபோல் 23 என்றும் வந்துள்ளது. அவற்றைப் பாருங்கள்.
ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 23வது இரவு என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி),
நூல்: அஹ்மத் (15466)
இதைப் போன்று 21, 23, 25 என்று மூன்று இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.
ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள். லைலதுல் கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில், இருபத்தி மூன்றாவது இரவில், இருபத்தி ஐந்தாவது இரவில் தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 2021
இதைப் போன்று 23, 29 இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.
லைலதுல் கத்ரு இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது. அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங் கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 2022
இப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன் சரியான கருத்து என்ன? என்பதற்கு இமாம் ஷாஃபீ அவர்கள் தெளிவான விடையை கூறியுள்ளார்கள்.
இப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு விளக்கம் அளித்த இமாம் ஷாஃபி அவர்கள், நபியவர்கள் கேட்கப்படும் கேள்விக ளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம் உள்ளவர்கள். இந்த இரவில் நாங்கள் லைலத்துல் கத்ரைத் தேடலாமா?’ என்று கேட்கும்போது அந்த இரவில் தேடுங்கள். என்று பதிலளித்திருப்பார்கள்” என்று கூறுகிறார்கள்.
திர்மிதீ : 722
அதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில் லைலத்துல் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 23வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப் பற்றியும் கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்திருப்பார்கள். எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள் பற்றியும் ஹதீஸ்களில் இடம் பெற்று இருக்கிறது. இந்தக் கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.
இஃதிகாஃபின் சட்டங்கள்
இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்’ என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.
நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.
ரமலானில் இஃதிகாப் எதற்காக?
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண் ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத்தான் ரமளானின் கடைசி பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் ரமலான் முதல் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார் கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) வந்து நீங்கள் தேடக் கூடியது (லைத்துல் கத்ரு) உங்க ளுக்கு இனி வரும் (நாட்களில் உள்ளது)’ என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். நாங்களும் அவர்க ளுடன் இஃதிகாப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) வந்து, நீங்கள் தேடக் கூடியது உங்களுக்கு இனி வரும் (நாட்களில் உள்ளது)’ என்றார்கள். ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு செய்ய எழுந்தார்கள். யார் நபியுடன் இஃதிகாப் இருந்தார்களோ அவர்கள் திரும்பிச் செல்லட்டும்! லைலத்துல் கத்ரு இரவு பற்றி எனக்குக் காட்டப் பட்டது. நான் மறக்கடிக்கப்பட்டு விட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாட்களில் ஒற்றையான நாளில் உள்ளது. நான் களிமண் மீதும் தண்ணீர் மீதும் ஸஜ்தாச் செய்வது போல் கண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி),
நூல்கள்: புகாரி (813), முஸ்லிம் (2168)
இஃதிகாபின் ஆரம்பம்
இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள்.
நூல்: முஸ்லிம் 2007
ஒற்றை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நாம் முன்பே அறிந்துள்ளோம். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ஆம் நாள் பஜ்ராக இருக்க முடியாது.
அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப் போயிருக்கும். 20 ஆம் நாள் தொழுது விட்டு இஃதிகாஃப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாக இருக்கும்.
இஃதிகாபின் முடிவு நேரம்
இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல் முடிந்தால் அன்றைய மஃக்ரி பில் (அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்) இல்லம் திரும்பலாம். ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால் அன்றைய மஃரிப் தொழுக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம்.
அபூஸயீத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்)
நூல்: புகாரி 2018
நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்தில் இஃதிகாப் இருக்கும்போது இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் போவார்கள் என்ற செய்தியிலிருந்து, கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பவர்கள் 29 இரவு கழிந்து அல்லது 30 இரவு கழிந்து மாலையாகி ஷவ்வால் மாதம் துவங்கும் இரவில் வீடு திரும்பலாம் என்பதை அறியலாம்.
பெருநாள் தொழுகை முடித்து விட்டுத்தான் வீடு திரும்ப வேண்டுமென சிலர் கூறினாலும் அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இல்லை.
பள்ளியில் கூடாரம் அமைக்கலாமா?
ஆயிஷா ரலி கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசி பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன். (சுருக்கம்)
நூல்: புகாரி 2033
இந்த ஹதீஸின் அடிப்படையில் சிலர் கூடாரம் அமைக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் வேறு சில ஹதீஸ்களை நாம் கவனிக்கும் போது இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் குறிப்பானது என்பதை விளங்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினார்கள். அவர்கள் இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது ஆயிஷா (ரலி)யின் கூடாரம், ஹஃப் ஸாவின் கூடாரம், ஸைனபின் கூடாரம் எனப் பல கூடாரங்களைக் கண் டார்கள். இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகிறீர்களா?” என்று கேட்டு விட்டு இஃதிகாஃப் இருக்காமல் திரும்பி விட்டார்கள். ஷவ்வால் மாதம் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி (2034)
நீங்கள் நன்மைத்தான் நாடுகிறீர்களா?” என்ற கேள்வியும், நபி (ஸல்) அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாபை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைக் காட்டு கின்றது.
மேலும் பின்வரும் ஹதீஸை பார்த்தாலும் மற்றவர்கள் கூடாரம் அமைக்கக் கூடாது என்பதை விளங்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்து விட்டுத் திரும்பியபோது நான்கு கூடாரங்களைக் கண்டு இவை என்ன? கேட்டார் கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது…
நூல் :புகாரி – 2041
நபி (ஸல்) அவர்களுடன் நபித்தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளனர். இதை கவனத்தில் வைத்து மேற்கூறிய ஹதீஸை கவனியுங்கள். காலைத் தொழுகையை தொழுது விட்டு நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் பார்த்த கூடா ரங்களின் எண்ணிக்கை மொத்தம் நான்கு. ஒன்று நபி (ஸல்) அவர்களுக் குரியது, இரண்டாவது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்குரியது. மூன்றா வது அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குரியது. நான்காவது அன்னை ஸைனப் (ரலி) அவர்களுக்குரியது.
இஃதிகாப் இருப்பதற்குக் கூடாரங்கள் அவசியம் என்றிருந்தால் நபித் தோழர்களும் கூடராங்களை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறு அமைத்தி ருந்தால் நான்கிற்கும் மேற்பட்ட கூடாரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இருந்ததோ மொத்தம் நான்கு கூடாரங்கள் மட்டுமே! எனவே நபித் தோழர்கள் கூடாரங்களை அமைக்கவில்லை என்பதையும் நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு கட்டளையிடவில்லை என்பதையும் நாம் அறியலாம். எனவே இஃதிகாபிற்கு கூடாரங்கள் தேவையில்லை.
இஃதிகாபில் பேண வேண்டிய ஒழுங்குகள்
பள்ளிவாசலில் இருக்கும்போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது.
பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்கா தீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
(அல்குர்ஆன் 2:187)
தேவையில்லாமல் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது
ஆயிஷா ரலி கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும்போது தமது தலையை வீட்டிலிருக்கும் என் பக்கம் நீட்டுவார்கள் அதை நான் வாருவேன். இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டி ற்குள் வர மாட்டார்கள். நூல்: புகாரி 2029
இதிலிருந்து தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது என்பதையும் அவசியத் தேவைக்காக வெளியே செல்லாம் என்பதை அறியலாம். தேவை ஏற்படும் போது பள்ளிவாசலில் அவசியமான
பேச்சுக்களைப் பேசலாம்.
ஸபிய்யா (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசி பத்து நாட்களில் இஃதிகாப் இருக்கும்போது அவர்களிடம் நான் செல்வேன் சற்று நேரம் அவர்களு டன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல் வரை வருவார்கள்.
(ஹதீஸின் சுருக்கம்)
நூல்: புகாரீ 2035
இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமலிருப்பதும் ஜனாஸாவில் பங்கெடுக்காமல் இருப்பதும் மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல் இருப்பதும், அணைக்காமல் இருப்பதும் அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமலிருப்பதும் சுன்னதாகும். மேலும் நோன்பு இல்லாமல் இஃதிகாஃப் இல்லை. ஜுமுஆ நடக்கும் பள்ளியில் தவிர இஃதிகாப் கூடாது”
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: அபூதாவூத் (2115)
இந்த ஹதீஸில் இடம் பெறும் சுன்னத்தாகும்” என்ற வாசகம் யாருக்குரி யது என்பதிலும், இந்த வாசகத்தை அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்களா? என்பதிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமலிருப்பதும் ஜனாஸா வில் பங்கெடுக்காமல் இருப்பதும் மனைவியைத் தீண்டாமல் இருப்பதும் அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமலிருப்பதும் சுன்னதாகும். ஜுமுஆ நடக்கும் பள்ளியில் தவிர இஃதிகாப் கூடாது” என்ற வாசகம் இந்தச் செய்தியில் இடம் பெறும் ஸுஹ்ரி என்ற அறிவிப்பாளருக்கு உரியது. இதை ஹதீஸின் வாசகமாக குறிப்பிட்டவர் யூகமாகக் குறிப்பிட்டு உள்ளார் என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: ஸுனன் தாரகுத்னீ, பாகம்: 2, பக்கம்: 201)
இதே செய்தியை பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த வாசகத்தை நம்பகத் தன்மையுள்ள பெரும்பாலானவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அடுத்து வருபவர்களின் சொல்லாகவே குறிப்பிட்டுள்ளார்கள். யார் இதை ஹதீஸின் வாசகமாகக் குறிப்பிட்டு உள்ளார்களோ அவர்கள் யூகமாகவே கூறியுள்ளார்கள். நூல் : பைஹகீ 8377
இமாம் ஸுஹ்ரீ அவர்கள் ஹதீஸ்களை அறிவிக்கும் போது தனது கருத் தையும் ஹதீஸ் வாசகங்களுடன் (இது என் கருத்து என்று) தெளிவு படுத் தாமல் இணைக்கும் வழக்கம் உள்ளவர். எனவே இந்தச் செய்தியை அடிப்ப டையாகக் கொள்ள முடியாது. (அல்லாஹ் மிக அறிந்தவன்)
இதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது நோயாளியை சந்திப்பார்கள், ஜனாஸாவில் கலந்து கொள்வார்கள் என்றும் சில ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது. அவையும் பலவீனமானவையே! புகாரியின் (2029) ஹதீஸின் அடிப்படையில் இஃதிகாஃப் இருப்பவர் அவசியமான தேவைகளைத் தவிர மற்ற எவைகளுக்கும் வெளியில் செல்லா மல் இருப்பது சிறந்தது.
பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா?
பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்குப் பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது அவர்களின் மனை வியரில் ஒருவரும் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரீ (309)
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபிகளாரின் மனைவியைத் தவிர வேறு எந்த பெண்களும் இஃதிகாஃப் இருந்ததாக நாம் அறிந்தவரை ஹதீஸ்களில் இடம் பெறவில்லை.
நபிகளாரின் மனைவிகள் இஃதிகாஃப் இருந்ததிலிருந்து கூடுதல் பட்சமாக பின்வரும் சட்டத்தை நாம் எடுக்கலாம்.
பள்ளிவாசலில் பெண்கள் இஃதிகாஃப் இருக்க வசதிகள் இருக்குமானால் கணவனுடன் அவர்கள் இஃதிகாஃப் இருக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களுடன்தான் அவர்களது மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.
பெண்கள் இஃதிகாஃப் தொடர்பாக அறிஞர்களிடையே உள்ள கருத்துக்க ளில் மேலே நாம் சொன்ன கருத்தே ஹதீஸுக்குப் பொருத்தமாக அமைந் துள்ளது. பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் கிடையாது.
பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருப்பது பித்அத் (நூதன பழக்கம்)” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியுள்ளார்கள்.
நூல்: பைஹகீ 8356
இஃதிகாப் சம்பந்தமான சிறப்புகளை பற்றி பல்வேறு ஹதீஸ்கள் வருகிறது ஆனால் அவை அனைத்தும் பலவீனமாக இருக்கிறது.
இன்னும் சில அறிஞர்களிடத்தில் ஒரு தவறான கருத்தும் நிலவுகின்றது அதாவது மக்கா மதினா பைத்துல் முகத்தஸ் ஆகிய மூன்று பள்ளிகளயில்தான் இஃதிகாப் இருக்க வேண்டும் என்று இதற்கு சில ஹதீஸ்களையும் ஆதாரமாக காட்டுகின்றனர் ஆனால் அவை அனைத்தும் பலவீனமாகவே இருக்கின்றன.
மேலும் இந்த ஹதீஸின் கருத்துக்கு மாற்றமாக மற்ற நபித்தோழர்கள், அலீ (ரலி) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கருத்துச் சொல்லியிருப்பது இந்த ஹதீஸை மேலும் பலவீனமடையச் செய்கிறது.
மேலும் இந்த ஹதீஸ், திருக்குர்ஆன் வசனமான நீங்கள் பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருக்கும் போது மனைவியுடன் சேராதீர்கள்” (அல் குர்ஆன் 2:187) என்பதற்கு முரணாகவும் இருக்கிறது.
நன்றி :-SLTJWEB
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger